--> -->

இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்

மே 31, 2022

இலங்கை இராணுவத்தின் 24வது தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே இன்று (31) கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து தனது உத்தியோகபூர்வ நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

இராணுவத்தின் மிகவும் சிரேஷ்ட அதிகாரியான விக்கும் லியனகே, நாளை (ஜூன் 01) இராணுவத் தளபதியாக கடமைகளைப் பொறுப்பேற்றவுடன் லெப்டினன்ட் ஜெனரல் தரத்திற்கு உயர்த்தப்படவுள்ளார்.

1986 ஆம் ஆண்டு ஒக்டோபர் 27 ஆம் திகதி இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்ட அவர், தியத்தலாவையில் உள்ள புகழ்பெற்ற இலங்கை இராணுவ அகாடமியிலும், பின்னர் பாகிஸ்தான் இராணுவ அகாடமியிலும் அடிப்படை இராணுவப் பயிற்சியைப் பெற்றார். அவர் கெடெட் பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவுடன், அவர் கஜபா படைப்பிரிவில் இரண்டாவது லெப்டினன்ட் நிலையில் நியமிக்கப்பட்டார்.

அவரது 35 ஆண்டுகால இராணுவ வாழ்க்கையில், பிளட்டூன் கமாண்டர், கம்பெனி கமாண்டர் மற்றும் 4 வது கஜபா படைப்பிரிவின் எட்ஜுடண்ட் உட்பட பல குறிப்பிடத்தக்க கட்டளை, பதவிகளை அவர் வகித்துள்ளார்.

இறுதி மனிதாபிமான நடவடிக்கையின் போது, ஜெனரல் விக்கும் லியனகே 57 மற்றும் 56 ஆவது படைப்பிரிவுகளின் 8 ஆவது கஜபா படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கினார். விடுதலைப் புலிகளுக்கு எதிராக பல வெற்றிகளைப் அவர் பெற்றுள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் பங்கேற்ற அவருக்கு ரண விக்கிரம பதக்கம (RWP) விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அவர் ரண சூர பதக்கம (RSP) பெற்றுள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மனிதாபிமான நடவடிக்கைகளின் போது பயங்கரவாதத்தை ஒழிப்பதில் ஒரு முன்னோடியாக இருந்ததற்காக இவருக்கு மூன்று முறை இந்த பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அவர் தேச புத்திர பதக்கம, கிழக்கு மனிதாபிமான நடவடிக்கை பதக்கம், வடக்கு மனிதாபிமான நடவடிக்கை பதக்கம், பூர்ண பூமி பதக்கம, வடக்கு மற்றும் கிழக்கு நடவடிக்கை பதக்கம், ரிவிரேச சேவை பதக்கம், 50 வது சுதந்திர ஆண்டு நினைவு பதக்கம், இலங்கை இராணுவத்தின் 50 வது ஆண்டு நினைவு பதக்கம், நீண்ட சேவை பதக்கம், சேவா அபிமானி பதக்கம போன்ற பதக்கங்களை அவர் பெற்றுள்ளார்.