--> -->

ஒட்டுசுட்டானில் தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடு இராணுவத்தால் கையளிப்பு

நவம்பர் 15, 2022

இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு ஒன்று, ஒட்டுசுட்டானில் வறுமைக்கோட்டின் கீழ் வசிக்கும் குடும்பத்திற்கு அண்மையில் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 64வது படைப்பிரிவின் 642வது பிரிகேடின் 23வது விஜயபாகு காலாட் படையணி படைவீரர்களின் தொழில்நுட்ப மற்றும் மனிதவள உதவியுடனும், கொழும்பு றோயல் கல்லூரி தமிழ் வகுப்பு (1980) வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு உறுப்பினர்களால் வழங்கப்பட்ட அனுசரணையுடனும் இப்புதிய வீடு நிர்மாணிக்கப்பட்டதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய வீட்டின் சாவிகள் பயனாளியான விதவைத்தாய் திருமதி இரத்தினம் பத்மராஜினியிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க, அனுசரணையாளர்கள், அரச அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.